குளச்சல், ஜூலை 14 –
குளச்சலில் உடன் படித்த மாணவியை நூதன முறையில் ஏமாற்றி தங்க நகைகள் பறித்த சம்பவத்தில் போலீசில் புகார் அளித்ததால் தாயாருடன் சேர்ந்து மாணவி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. குளச்சல் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இரு மாணவிகள் ஒரே பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர். கடந்த கல்வி ஆண்டில் இருவரும் தேர்ச்சி பெற்று தற்போது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கின்றார்கள். இருவரும் நெருங்கிய தோழிகளாகவும் இருந்தனர். இதில் ஒரு மாணவி மிகவும் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர். அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆர்வம் உடையவராக இருந்தார். குறிப்பாக இன்ஸ்டாவில் அதிக அளவில் சாட்டிங் செய்வார். இவர் அடிக்கடி பெற்றோர் வாங்கி கொடுக்கும் தங்க நகைகளை இன்ஸ்டாவில் பதிவு செய்து வந்துள்ளார். இதை அறிந்த தோழி எப்படியாவது ஏமாற்றி தானும் நகைகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதற்காக இன்ஸ்டாவில் ஒரு ஆண் நண்பர் பெயரில் ஐடி உருவாக்கி மாணவியுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். எதிரே சாட்டிங் செய்வது தனது பள்ளி தோழி தான் என்பது தெரியாமல் அந்த மாணவி ஆண் நண்பர் என நினைத்து சாட்டிங் செய்து நாளடைவில் அந்த நண்பரை காதலிக்கவும் தொடங்கியுள்ளார். இதை சாதகமாக பயன்படுத்திய அந்தப் பெண் இதை வைத்து பணத்தைக் கறக்க முடிவு செய்தார். அதன்படி தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை அவசர தேவையாக மருந்து உதவிக்கு பணம் தேவைப்படுகிறது என கூறி சாட்டிங் செய்துள்ளார். உடனே உனது பள்ளி தோழியை எனக்கு நன்றாக தெரியும். அவரிடம் நீ பணமோ நகையோ கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன் என கூறியுள்ளார். இதை நம்பிய மாணவியும் தனது ஆண் நண்பரிடம் கொடுக்கக் தங்க நகைகளை தோழியிடம் கொடுத்துள்ளார்.
நகை வாங்கிய தோழி அதை தனியார் வங்கிகளில் அடகு வைத்து தனது வீட்டில் கொடுத்துள்ளார். இதற்கிடையே பொதுத் தேர்வு முடிந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மாணவியின் வீட்டில் செல்போனை பறித்தனர். அப்போது தோழி நீ எனது செல்போனில் சாட்டிங் செய்து கொள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மாணவி சாட்டிங் செய்து மேலும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் தாயார் கடந்த வாரம் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்த நகை பெட்டியை பார்த்தபோது நகைகள் ஏராளம் மாயமாகி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்து மகளிடம் விசாரித்த போது முதலில் அவர் எனக்கு தெரியாது என்று கூறினார். இதனால் போலீசில் புகார் செய்ய சென்றதும் பயந்து போன மாணவி பள்ளி தோழியிடம் நகைகள் எடுத்துக் கொடுத்த விவகாரத்தை கூறியுள்ளார்.
இதனால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து அவரை கண்டித்து பின்னர் மகளின் தோழியை சந்தித்து விசாரித்தனர். முதலில் தனக்கு எதுவும் தெரியாது என கூறியவர் பின்னர் விவகாரம் குளச்சல் காவல் நிலையத்திற்கு சென்றது. போலீசார் மாணவி சாட்டிங் செய்த முகவரியை வைத்து விசாரித்த போது தான் மோசடிகள் அம்பலமானது. இந்த தகவல் காட்டு தீ போல் அந்த கிராமம் முழுவதும் பரவியது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளி தோழியை இப்படி ஏமாற்றி நகையை வாங்கி அடகு வைத்து உள்ளீர்களே எனக் கேட்க தொடங்கினர். இதனால் அவமானம் தாங்காமல் நேற்று முன்தினம் பள்ளி மாணவி தோழி மற்றும் தாயார் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயும் மகளும் விஷம் குடித்ததால் தற்போது விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் இருந்து வெளிவந்தபின் மீண்டும் விசாரிப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


