ஈரோடு, ஜூன் 10 –
ஈரோட்டை சேர்ந்த சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான எஸ் ஆர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, நாட்டின் பிரதமராக மிக நீண்ட காலம் பணியாற்றிய தலைவராக பிரதமர் நரேந்திர மோடி புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார்.
ஜூன் 10, 2026 அன்று, இந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேருவின் 4,398 நாட்கள் பிரதமர் பதவிக் கால சாதனையை முறியடித்து உள்ள அவர் கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பல்வேறு மாற்றங்களையும் சாதனைகளையும் அவர் தலைமையிலான அரசு நிகழ்த்தியுள்ளது.
குறிப்பாக, ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கிய பிரிவு 370 ரத்து, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்திய நடவடிக்கைகள், நக்சலிச வன்முறைகளை கட்டுப்படுத்திய முயற்சிகள், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்திய கொள்கைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
மேலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா திட்டம், ஜல் ஜீவன் மிஷன், விவசாயிகள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.
உலகத் தரத்திலான நெடுஞ்சாலைகள், விரைவு ரயில் திட்டங்கள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடுகள், டிஜிட்டல் இந்தியா, யூபிஐ பரிவர்த்தனை புரட்சி, ஸ்டார்ட்அப் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இந்தியாவின் பொருளாதாரத்தை புதிய உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளன.
சர்வதேச அரங்கிலும் இந்தியாவின் செல்வாக்கு கணிசமாக உயர்ந்துள்ளது. ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்துதல், உலக நாடுகளுடன் வலுவான உறவுகளை உருவாக்குதல், இந்தியாவின் குரலை உலக மேடைகளில் உறுதியாக ஒலிக்கச் செய்தல் போன்றவை இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளன.
“வளர்ந்த இந்தியா – 2047” என்ற இலக்கை நோக்கி இந்தியாவை முன்னேற்றிச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இந்த வரலாற்றுச் சாதனை, இந்திய ஜனநாயகத்தின் வலிமையையும் மக்கள் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. இந்த மகத்தான சாதனையை எட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வி தி லீடர்ஸ் சார்பாக வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



