நாகர்கோவில், ஜூலை.30-
குமரி மாவட்ட காவல் துறை சார்பில் “விபத்தில்லா குமரி” என்னும் இலக்கை அடையும் நோக்கில், ‘காவல் ஏ.ஐ.’ என்ற தானியங்கி போக்குவரத்து விதிமீறல் கண்டறியும் நவீன கேமரா ஏற்கனவே நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் நிறுவப்பட்டுள்ளது. இதேபோன்று மாவட்டத்தில் மேலும் 10 இடங்களில் தானியங்கி போக்குவரத்து விதிமீறல் கண்டறியும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நாகர்கோவில் வடசேரி மீன்சந்தை சந்திப்பு, அப்டா மார்க்கெட், ‘செட்டிகுளம் சந்திப்பு, பார்வதிபுரம், கருங்கல் சந்திப்பு, திருத்துவபுரம், அழகியமண்டபம், தக்கலை சந்திப்பு, அஞ்சுகிராமம், கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ஆகிய 10 இடங்களில் இந்த நவீன கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
இவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் நாகர்கோவில் வடசேரி மீன்சந்தை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அபராதம் விதிப்பது மட்டும் காவல்துறையின் நடவடிக்கை அல்ல. விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நாகர்கோவில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் ஏற்கனவே தானியங்கி கேமரா வைக்கப்பட்டு இதுவரை 4500 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நடவடிக்கைக்கு பின் நாகர்கோவில் மாநகரில் ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது மேலும் 10 இடங்களில் ஏ ஐ தொழில்நுட்ப கேமராக்கள் செயல்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
இதன் மூலம் இன்னும் கூடுதலாக ஹெல்மெட் அணிவார்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறோம். குமரி மாவட்டத்தில் 70 சதவீத உயிரிழப்புகள் தலை காயத்தால் தான் நிகழ்கின்றன. இதை தடுக்கும் வகையில் தான் இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் கூறினார்.



