கருங்கல், அக். 13 –
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாலப்பள்ளம் முதல்நிலை பேரூராட்சியானது 6.25 ச.கி.மீ பரப்பளவு கொண்டதாகும். இப்பேரூராட்சியில் தற்போதைய மக்கள் தொகை தோராயமாக 25469 ஆகும். இப்பேருராட்சியில் 18 வார்டுகளை உள்ளடக்கி 5898 வீடுகளும், 297 வணிக கட்டிடங்களும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் சிறிய அளவிலான தினசரி சந்தை உள்ளது.
ஆனால் இப்பேரூராட்சி பகுதியில் இதுவரை பேருந்து நிலையம் கிடையாது. இதனால் பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கு சரியான பேருந்து வசதிகள் இல்லாததால் வேறு பேருந்து நிலையங்களுக்கு சென்று தான் பேருந்துகள் ஏற வேண்டும் என்ற நிலை காணப்பட்டது. ஆலஞ்சி புனித பிரான்சீஸ் சவேரியார் தேவாலயத்திற்கு சொந்தமான 95.95 சென்ட் இடத்தை தற்போது பேரூராட்சிக்கு தானமாக பத்திரப்பதிவு செய்து வழங்கப்பட்டது.
இதனால் ஆலஞ்சி பாலப்பள்ளம் பேரூராட்சி பொதுமக்களின் நலன் கருதி அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ் குமார் அரசிடம் விடுத்த கோரிக்கையின் பேரில்
கடந்த 2025 – ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையின் போதுபொதுமக்களின் நலன் கருதி ஆலஞ்சி பகுதியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கபடும் என்று நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
இதனையடுத்து தற்போது புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதையடுத்து ஆலஞ்சி பகுதியில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கும் பணியை பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் தலைமையில், பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெபர்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் ஆஸ்கர் பிரடி, வார்டு உறுப்பினர்கள் பெலிக்ஸ் ஆன்றனி, மெத்தோடியஸ், மரிய தாஸ், ஷோபா மற்றும் காங்கிரஸ், திமுக நிர்வாகிகள், செயல்வீரர்கள், பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



