கிருஷ்ணகிரி, ஜன. 24 –
போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்தூர் ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தி, வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சேலம் மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் அவர்கள் தகவல்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள ஆனந்தூர் ஏரியில் 27.12.2025 அன்று பொக்லைன் மூலம் லாரியில் மணல் கடத்தல் நடப்பதாக புகார் வந்த தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தர வின்படி, ஊத்தங்கரை வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர்கள் அப்பகுதியில் ரோந்து சென்று போது, ஏரியில் பொக்லைன் மூலம் லாரியில் மண் கடத்த முயன்ற நபர்களிடம் உரிய அனுமதி உள்ளதா என்று விசாரித்தபோது, முன்னுக்கு, பின் பதில் அளித்தனர்.
தொடர்ந்து, வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் பொக்லைன் மற்றும் லாரியை எடுக்க முயன்றபோது டிரைவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததையடுத்து போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு லாரி மற்றும் பொக்லைன் வாகனங்களை பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, மணல் குற்றவாளிகளான சுரேஷ், தங்கபாலு இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சேலம் மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


