ஈரோடு, செப். 29 –
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி சத்தியமங்கலம் விண்ணம்பள்ளியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், தங்கும் அறைகள். சமையல் அறை. கழிவறை ஆகியவற்றை பார்வையிட்டார். இல்லத்தில் 44 தொழுநோய் பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். அவர்களிடம் உணவு, தங்கும் வசதி குறித்து கேட்டறிந்து கலந்துரையாடியபோது அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருப்பதாகவும் சத்தான உணவுகளும் சுகாதாரமான ஒரு சூழ்நிலையும் இருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், ஏதேனும் கோரிக்கைகள் உள்ளதா என்பது குறித்தும் அவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்நது ஒவ்வொரு அறையினையும் பார்வையிட்டு, மின்விசிறி இல்லாத அறைகளில் உடனடியாக மின்விசிறி ஏற்பாடு செய்யவும், கூடுதலாக நடமாடும் கழிப்பறை வசதிகள் மற்றும் அங்கு வசிப்பவர்கள் பொழுது போக்கிற்கு கூடுதல் தொலைக்காட்சி பெட்டிகள் ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள எலத்தூர் ஏரியினை பார்வையிட்டார். இந்த ஏரியானது. 37.42 ஹெக்டேர் பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அங்கு உள்ள பறவைகள். தாவர வகைகள். குளத்தின் பல்லுயிர் தன்மை ஆகியவற்றை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பு கவனம் செலுத்தி சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி கொடிவேரி அணைக்கட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கு வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து தொடர்புடைய அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், காவிலிபாளையம் குளத்தினையும் நேரில் சென்று பார்வையிட்டு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவும், பசுமையான செடி, கொடிகள் வளர்க்கவும் அறிவுறுத்தினார்.



