திருப்பத்தூர், மே 18 –
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1100 அரசு மருத்துவர்கள் பணிக்கான தேர்வினை ஜனவரி 25ம் தேதி மருத்துவ பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அத்தேர்வை 27000 பேர் எழுதினர். மதிப்பெண் அடிப்படையில் 1100 மருத்துவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மார்ச் 10ம் தேதி அனைவருக்கும் பணி ஆணை வழங்க சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர். அதில் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 320 மருத்துவர்களுக்கு அப்போதைய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அரசு மருத்துவர் பணிக்கான பணி ஆணைகளை வழங்கினார்.
மீதமுள்ள 780 பேருக்கு அரசு மருத்துவர் பணிக்கான பணி ஆணை மறுநாள் வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், அன்றே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகி விட்டது என்றும், மீதமுள்ள நபர்களுக்கு மே 15ம் தேதி அரசு மருத்துவர் பணிக்கான ஆணை வழங்கப்படும் என்றும், அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மருத்துவர் பணிக்கான ஆணை பெற்ற 320 மருத்துவர்கள் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்களாகிவிட்டது. மீதமுள்ள 780 பேர் மருத்துவர் பணி ஆணை பெறாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிமேலும் காலம் தாழ்த்தாமல் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 780 மருத்துவர்களுக்கு பணி ஆணை வழங்கி வாழ்வில் ஒளியேற்றுமாறு தமிழ்நாடு முதலமைச்சரை பாதிக்கப்பட்ட மருத்துவர்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.


