தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை
ஈரோடு, செப். 1:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட பேரவை கூட்டம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் மகாலிங்கம் கூட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் விஜய மனோகரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் சுமதி வரவு-செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனர். மாநில பொருளாளர் டேனியல் ஜெய்சிங் நிறைவுரை ஆற்றினார்.
கூட்டத்தில் அரசு ஊழியர்களின் நலன் தொடர்பாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட்டு, திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், நீண்டகாலமாக ஓய்வூதியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இளைஞர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும், அரசாணை எண் 56 மற்றும் 115-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. பெண் ஊழியர்களின் நலன் தொடர்பாக முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைத்து, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி பெண் ஊழியர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வு காண வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதவிர, தாளவாடி, பர்கூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிச்சூழலை மேம்படுத்தும் வகையில், மலைப்பகுதிகளில் அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் ராக்கிமுத்து, இணை செயலாளர்கள் சரவணமணி, சசிகலா, சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.



