திருப்பூர், ஜூலை 16 –
திருப்பூரில் எவ்வித முறையான ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாகத் தங்கி வேலை செய்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 11 பேருக்குத் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி, திருப்பூர் மாநகர நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வள்ளியம்மை நகர் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சிலரது நடவடிவக்கைகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததால், அவர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், முகமது அஷ்ரபுல் அலோம் (34), முகமது ருபெல் (34), முகமது மொனிர் ஹுசைன் (34), முகமது அவௌல் (37), முகமது இம்ரான் ஷேக் (31), முகமது சாண்டோ (36), முகமது அணிப் (40), முகமது ரசேல் (40), சம்சூர்நகார் (31), அபுபரமொன் (25) மற்றும் சொஜிப் போர்மன் (26) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் எவ்வித முறையான கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) மற்றும் விசா போன்ற ஆவணங்களின்றி, பங்களாதேஷ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்ததும் அம்பலமானது. இதையடுத்து நல்லூர் போலீசார் 11 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பங்களாதேஷ் நாட்டவர்களுக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.


