தூத்துக்குடி, மார்ச் 23 –
தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற கொண்டிருந்த அரசுப் பேருந்து, வாகைகுளம் அருகே வரும் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பேருந்தில் இருந்த 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று இரவு அரசுப் பேருந்து ஒன்று 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கிப் புறப்பட்டது. பேருந்து வாகைகுளம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அதன் டீசல் டேங்க் (எண்ணெய் தொட்டி) பகுதியில் திடீரென தீப்பொறி ஏற்பட்டு புகை கிளம்பியது. இதனை கவனித்த ஓட்டுநர், உடனடியாகப் பேருந்தைச் சாலையோரம் நிறுத்திப் பயணிகளை இறங்குமாறு எச்சரித்தார்.
பயணிகள் அனைவரும் பதற்றத்துடன் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் பரவித் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பயணிகள் அனைவரும் முன்கூட்டியே இறங்கியதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாகக் காட்சியளித்தது.
இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, இயந்திரக் கோளாறு காரணமாகத் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



