கன்னியாகுமரி மே 6
அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்தும், ரவுண்டானா அமைக்க வேண்டும் என கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலரும் கவுன்சிலருமான ஜோஸ் திவாகர் கூறியதாவது குமரி மாவட்டத்தில் இரு மாவட்டங்களின் மிக முக்கிய எல்லை பகுதியான அஞ்சுகிராமம் வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது. இங்கு காவல் நிலையம், பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகள் இயங்கி வருகின்றன.
மேலும் அஞ்சுகிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தினமும் இங்கே வந்து செல்வது வழக்கமாகும். இங்கே பேருந்து நிலையம் இருப்பதால் அஞ்சுகிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கிருந்து வெளியூர்களுக்கு தங்களின் பல்வேறு வகையான பணிகள் நிமித்தமாக செல்ல வேண்டி தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
மேலும் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அஞ்சுகிராமத்தில் தங்கியிருந்து பணிக்குச் சென்று வருகிறார்கள். இதனால் இந்தப் பகுதி எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சாலையின் அகலம் குறைந்து காணப்படுவதாலும், இந்தப் பகுதிக்கு வந்து செல்கின்ற மக்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதாலும், இந்த வழியாக வரும் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருந்து வெளியே செல்லமுடியாமலும் பல நேரங்களில் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் உயிர் இழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
மேலும் குமரி மாவட்டத்தில் மிக முக்கியமான பகுதி என்பதால் அஞ்சுகிராமம் சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை நியமித்தும் அந்தப் பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.