திருவண்ணாமலை, பிப். 20 –
சங்கத்தின் அங்கீகார தேர்தலை நடத்தக் கோரி திருவண்ணாமலையில் நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முன்பு இன்று காலை இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். தேவேந்திரன் தலைமை தாங்கினார். சங்க உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றனர்.
சுமை தூக்குபவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் பச்சை அட்டையை வழங்கிட வேண்டும், வருகை பதிவேட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்களின் பெயர்களை பதிவிட வேண்டும், சங்க அங்கீகார தேர்தலை உடனடியாக நடத்திட வேண்டும், தொழிலாளர்களை வஞ்சிக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் தர ஆய்வு மேலாளர் அன்புராஜை திருச்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும், தொழிலாளர்களுக்கான கோப்புகளை கிடப்பில் போடுவதை கைவிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து அந்தந்த கிடங்குகளில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப் போவதாக நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.



