கிருஷ்ணகிரி, மார்ச் 27 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை (தனி) சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இந்த பேரணியை ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலருமான சிவகுமார் மற்றும் ஊத்தங்கரை வட்டாட்சியரும், தேர்தல் உதவி அலுவலருமான ராஜலட்சுமி தலைமையில் நடத்தினர். 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்வதற்கும், வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே வலியுறுத்துவதற்கும் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் நாடகக் கலைஞர்கள் சிவன் உள்ளிட்ட பல்வேறு கடவுள் மற்றும் புராண வேடமணிந்து கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பேனர்கள் ஏந்தியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் சென்றனர். இறுதியாக, பேரணி ஊத்தங்கரை பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.



