சுசீந்திரம், டிச. 26 –
திருவனந்தபுரம் ஜெகதி கொட்டியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஹரிந்திரநாத் (55). இவர் ஐ. எஸ். ஆர். ஓ. வில் காண்ட்ராக்டராக வேலை பார்த்து வருகிறார். திருவனந்தபுரம் சிட்டார்டின் கரா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (55). இவர் கேரளாவில் அரசு வேலை பார்த்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள் மாதந்தோறும் இருவரும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு வருவது வழக்கம். அது போல் நேற்று இருவரும் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு மாலை சுசீந்திரம் கோவிலுக்கு வந்தனர்.
கோவில் முன்பு இருவரும் வந்து கொண்டிருந்தபோது ராஜேஷ் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை பார்த்த ஹரிந்திரநாத் உடனடியாக ராஜேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ராஜேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
ராஜேஷ் பலியானது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஹரிந்திரநாத் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பலியான ராஜேஷின் உடல் இன்று ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவிலுக்கு வந்த இடத்தில் அரசு ஊழியர் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


