திருப்பத்தூர், செப். 30 –
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட அக்ராகரம் ஊராட்சியில் பறையூர் வட்டம் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்றம்பள்ளி அடுத்த அக்ரகாரம் ஊராட்சியில் உள்ள பறையூர் வட்டம், வேடி வட்டம், ஏரிஎதுவாய் வட்டம், ஓம்சக்தி நகர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. புதுப்பேட்டை ரோடு முதல் பச்சூர் சுங்கச்சாவடி வரை இனைக்கும் சாலை மோசமாக உள்ளது என அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதுவரை புதிய சாலை அமைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அலட்சியம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த சாலையில் தினந்தோறும் முதியவர் முதல் பள்ளி குழந்தைகள் வரை சென்று வருகின்றனர். சம்பந்தப்பட்ட சாலை குண்டும் குழியுமாக உள்ளதை அப்பகுதி மக்கள் தொடர்ந்து நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.



