நாகர்கோவில், ஜூன் 30 –
குமரியில் வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கணவன், மனைவி இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகர்கோவில் கிறிஸ்து நகர் பகுதியை சேர்ந்தவர் சைனூல் ஆப்தின் (52). இவருக்கும் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாண்டியன் வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பி வருவதாகவும் உங்களுக்கு தெரிந்த நபர்கள் இருந்தால் கூறுங்கள் என்றாராம். இதை அடுத்து சைனுல் ஆப்தின் வெளிநாட்டில் ஆயில் நிறுவனத்தில் வேலைக்காக உறவினர்கள் 6 பேரிடம் ரூ. 10 லட்சத்து 30 ஆயிரம் வசூலித்து பாண்டியனிடம் கொடுத்துள்ளார். ஆனால் பாண்டியன் யாரையும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் சந்தேகம் அடைந்த சைனுல் ஆப்தின் பணத்தை திருப்பி தருமாறு பாண்டியனிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. இதனால் சைனுல் ஆப்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் செய்தார்.
இது தொடர்பாக விசாரிக்க ஆசாரிப்பள்ளம் போலீசுக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். இதை அடுத்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி பாண்டியன் மற்றும் அவரது மனைவி சகாயராணி மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருப்பத்தூர் சென்று பாண்டியன், சகாயராணி இருவரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.


