கமுதி, ஜூன் 4 –
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் கடந்த 2025ஆம் ஆண்டு நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்விடும் தருவாயில் மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிர்கள் கருகி, விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம், முழுமையான பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி வழங்கக் கோரி கமுதி, சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சார்பில் பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களும் கோரிக்கை முழக்கங்களும் நடத்தப்பட்டன. ஆனால் அப்போதைய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என குறிபிட்டார்.
ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் விவசாயக் கடன் தள்ளுபடியும், பயிர் காப்பீட்டுத் தொகையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்த நிலையில், தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகளின் ஒருங்கிணைப்பு குழுவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் தரைக்குடி முத்துராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
எனவே, தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான விவசாயக் கடன் தள்ளுபடியை தமிழக அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர், காப்பீட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் 100 சதவீத பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உடனடியாக காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டால்தான் விவசாயிகள் நம்பிக்கையுடன் இந்த ஆண்டு பருவமழையை முன்னிட்டு மீண்டும் விவசாயப் பணிகளைத் தொடங்க முடியும். மகாராஷ்டிரா அரசு செயல்படுத்தியுள்ள கடன் தள்ளுபடி திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தமிழக அரசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் முழுமையான காப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என்றும் விவசாயிகள் சார்பில் அவர் கேட்டுக்கொண்டார்.



