களியக்காவிளை, ஜூன் 13 –
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் 43 வயது நபர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரி மாவட்ட எல்லை களியக்காவிளை சோதனை சாவடியில் சுகாதார துறை சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நபர் தற்போது கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். வௌவால்கள் அதிகம் இருந்த ஒரு கட்டிடத்தின் கிடங்கை சுத்தம் செய்தபோது அவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டதாக முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து வாகனங்களில் வரும் பயணிகளை தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மற்றும் கண்காணித்த பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்க சுகாதார துறை உத்தரவிடப்பட்ட நிலையில், கேரளாவில் இருந்து வ குமரி மாவட்டம் வரும் வாகனங்களை எல்லையில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தி பயணிகளுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உள்ளதா என சோதனை மேற்கொண்ட பிறகு தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள் இருந்தால் அவர்களின் மொபைல் எண் மற்றும் முகவரிகளை பதிவு செய்து சிகிட்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அதிகாரி மாவட்ட சுகாதார அலுவலர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் இருந்து குமரி மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் நுழைய பத்திற்கும் மேற்பட்ட வழித்தடங்கள் உள்ள நிலையில் களியக்காவிளை பகுதியில் ஒரு பகுதியில் மட்டுமே இந்த சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.



