சென்னை, மே 1 –
10 வயது சிறுவனின் நெஞ்சகப் பகுதியில் உருவான 900 கிராம் புற்றுநோய் கட்டியை சென்னை ரெயின்போ குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி குணப்படுத்தினர்.
இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நந்தினி கூறுகையில்: சுவாச தொற்று, மூச்சுத் திணறல், நெஞ்சு சளி ஆகிய பாதிப்புடன் 10 வயது சிறுவன் ரெயின்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவரது நெஞ்சகப் பகுதியில் பெரிய கட்டி உருவாகி இருந்தது தெரியவந்தது.
திசு பகுப்பாய்வில் அது ” மெடியாஸ்டினல் ஜெர்ம் செல் ” எனப்படும் புற்றுநோய் கட்டி என்பது தெரியவந்தது. எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகும் இந்த வகை கட்டிகளை உரிய நேரத்தில் அகற்றாவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும் . அச்சிறுவனுக்கு நெஞ்சகப் பகுதியில் 75% ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.
இதயம் மற்றும் முக்கிய நாளங்களை அழுத்திக் கொண்டிருந்த அக்கட்டியின் அளவை குறைக்க தொடர் கீமோ தெரிப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சிறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை மருத்துவ குழுவினர் மொத்தமாக அகற்றினர். தற்போது அந்த சிறுவன் நலமாக வீடு நலம் பெற்று வீடு திரும்பி உள்ளார் என்று தெரிவித்தார்.
குழந்தைகள் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரகவியல் நிபுணர் டாக்டர் தினேஷ் பாலாஜி கூறுகையில், “இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவக் குழுவினர் பொதுவாக இதய அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஸ்டெர்னோடமி’ அதாவது நெஞ்சு எலும்பைத் திறக்கும் முறை மூலம் திறந்த மார்பக அறுவை சிகிச்சையைச் செய்தனர்.
சுமார் 900 கிராம் எடையுள்ள அந்தக் கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, சிறுவனுக்கு 24 மணி நேரத்திற்கு மட்டுமே வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டது. அடுத்த நாளே அவன் வழக்கம் போல் சாப்பிடத் தொடங்கினான். நான்கு நாட்களுக்குள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான். 6 முதல் 8 வாரங்களுக்குப் பிறகு எடுக்கப்பட்ட ஸ்கேனில், கட்டி முழுமையாக அகற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது” என்றார்.



