தஞ்சாவூர், ஜூன் 22 –
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று சேர்க்கப்பட உள்ள திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி .நடராஜன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: கர்நாடக அரசு காவிரியில் மேகதாது புதிய அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தி, தமிழக சட்டப் பேரவையில் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு திர்மானம் நிறைவேற்றப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அந்த திர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் முன்மொழிந்த புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் முழுமையாக வாசிக்கப்படாமலேயே முதலமைச்சர் விஜய் மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திருத்தத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. நதிநீர் பகிர்வுக்கான தீர்வுகள் ஏற்கனவே இருக்கும்போது அணை கட்டுவதற்காக புதிய நடுவர் மன்றம் கூறுவது காவிரி பிரச்சனையை மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரு தவறான முன்னெடுப்பாகும். எனவே புதிய நடுவர் மன்ற கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்.
தமிழக அரசு புதிய நடுவர் மன்ற கோரிக்கையை தவிர்த்து கர்நாட காவில் அணைக்கட்டும் முயற்சியை தடுக்க சட்டபூர்வமான, ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட செயலாளர் என் வி கண்ணன், மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.



