மார்த்தாண்டம், ஜூலை 25 –
களியக்காவிளையை அடுத்த பளுகல் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ராஜி (33). தந்தைக்கு சமையல் வேலைக்கு உதவி செய்து வந்து உள்ளார். இவர்கள் இருவரும் தக்கலையில் நடைபெற்ற சமையல் வேலைக்காக செல்ல இருசக்கர வாகனத்தில் மார்த்தாண்டம் மேம்பாலம் மேல் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த மினி டெம்போ மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தந்தை மகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ராஜி இறந்ததாக தெரிவித்தனர்.
தந்தை காயங்களோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தந்தை கண் முன் மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



