மார்த்தாண்டம், ஆக. 1 –
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் மகள் சௌபர்ணிகா (23). இவருக்கும் பொருந்தாறவிளை பகுதியை சேர்ந்த கனகராஜ் மகன் விஜய் என்பவருக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமண நடந்துள்ளது. அப்போது வரதட்சணையாக சௌபர்ணிகா வீட்டில் இருந்து 142 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொடுத்துள்ளனர்.
பின்னர் ஒரு வாரம் செளபர்ணிகா மற்றும் விஜய் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதற்குப்பின் வரதட்சணையாக கொடுத்த நகையிலிருந்து 125 பவுன் தங்க நகைகளை விற்று வட்டி தொழில் செய்யலாம் என விஜயின் தாயார் வசந்தகுமாரி (60) மற்றும் அவரது சகோதரி விஜிலா (29) ஆகியோர் சௌபர்ணிகாவிடம் நகையை கேட்டுள்ளனர். சௌபர்னிகா தர மறுத்து தனது பெற்றோரிடம் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயின் தாய் மற்றும் சகோதரி சௌபர்ணிகாவை துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும் சௌபர்ணிகாவின் பெற்றோரின் சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கை விஜய்க்கு எழுதி தர வேண்டும் இல்லையென்றால் அந்த பங்குக்குரிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சௌபர்ணிகா கடந்த 2023 ஆம் ஆண்டு கணவரை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.
பின்னர் இது குறித்து குழித்துறை நீதிமன்றத்தில் அதிக வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக புகார் அளித்தார். புகாரின் பேரில் கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் கணவர் விஜய் அவரது தாய் வசந்தகுமாரி, சகோதரி விஜிலா மற்றும் தந்தை கனகராஜ் ஆகிய நான்கு பேர் மீது மார்த்தாண்டம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


