மார்த்தாண்டம், ஜூலை 26 –
மார்த்தாண்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டரை மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் கஞ்சிமடத்தைச் சேர்ந்த ஸ்டாலின் மகன் அஜித் (16). இவர் பிளஸ் ஒன் படித்து வருகிறார். இவரது நண்பர்கள் தேங்காப்பட்டணம் பகுதி முகமது அலி மகன் அப்சல் (17). இவர் பிளஸ் டூ படித்து வருகிறார்.தேங்காபட்டணத்தைச் சேர்ந்த ஷேக் முகைதீன் மகன் அஜ்மல் (16). பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமியார் மடத்தைச் சேர்ந்த நசீர் மகன் நாசில் (15). இவர் பிளஸ் ஒன் படித்து வருகிறார்.
நான்கு பேரும் நேற்று முன்தினம் இரவு குழித்துறை வாவுபலி பொருட்காட்சிக்கு சென்றனர். இரவு 10 மணிக்கு பதிவு எண் தெரியாத ஒரு ஸ்கூட்டரில் நான்கு பேரும் சென்றனர். அப்சல் ஸ்கூட்டரை ஓட்ட அவருக்கு பின்னால் அஜ்மலும் அதன் பின்னால் நாசிலும் அதன் பின்னால் அஜித் உட்கார்ந்திருந்தனர். மார்த்தாண்டம் கல்லுத் தொட்டி அருகே செல்லும் போது நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி வந்த பஸ் மீது மோதியது. இதில் அப்சல் சம்பவ இடத்திலே பலியானார். அஜ்மல் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் அங்கு வைத்து பலியானார். படுகாயம் அடைந்த இருவரும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அஜித் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் பஸ் டிரைவர் விழுந்தம்பலத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இந்த விபத்துக்கு டிரைவர் காரணம் இல்லை. சிறுவர்கள் தான் பஸ் மீது வந்து விழுந்தனர் என தெரிவித்தனர். இதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் யூனியன் சார்பில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் டிரைவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தியும் நேற்று பிற்பகல் 12 மணி முதல் பஸ்களை மார்த்தாண்ட பஸ் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்ட் முழுவதும் நிரம்பியது. அதனை தொடர்ந்து வந்த பஸ்கள் மார்த்தாண்டம் மார்க்கெட் ரோட்டில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மார்த்தாண்டம் மேம்பாலம் வரையும் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் மறுபுறம் விரிகோடு வரையும் பஸ்கள் வரிசையாக நின்றது. போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர்ந்து மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் முன் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதயரேகா பேச்சுவார்த்தை நடத்தினார். எந்த முடிவும் வராதது தொடர்ந்து தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் வருகை தந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என உத்தரவாதம் கொடுத்தார். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்தனர். வழக்கு பதிவு செய்த பிறகு பஸ்களை எடுப்பதாக தெரிவித்தனர். இரு தரப்பிலும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
சம்பந்தப்பட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் இல்லையேல் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என ஒரு வழியாக முடிவுக்கு வந்ததை தொடர்ந்து பிற்பகல் 2.30 மணி முதல் பஸ்கள் இயங்கத் துவங்கியது. இரண்டரை மணி நேரம் மார்த்தாண்டம் ஸ்தம்பித்தது.
சிஐடியு யூனியன் சார்பில் சுரேஷ்குமார், பிஎம்எஸ் யூனியன் சார்பில் சதீஷ், ஏடிபி யூனியன் சார்பில் பிரதீஷ், ஐஎன்டிசி யூனியன் சார்பில் எட்வின், எல்பிஎப் யூனியன் சார்பில் சதீஷ் சிங், ஹெச்எம்எஸ் யூனியன் சார்பில் முத்துக்கருப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காக்கி யூனிஃபாமுடன் டிரைவர்களும் கண்டக்டர்கள் டிக்கெட் மற்றும் கலெக்சன் பேக் உடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்த்தாண்டம் போக்குவரத்து கழக கிளை மேனேஜர் ஸ்டாலின், குழித்துறை கிளை மேனேஜர்கள் ஜெபின், சுந்தர்சிங், திருவட்டாறு கிளை மேனேஜர் அனீஸ் ஆகியோர் இவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். பிற்பகல் 2.30 மணிக்கு போராட்ட முடிவுக்கு வந்தது பின் டிரைவர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் சிறுவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.



