நாகர்கோவில், ஜூலை 27 –
இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மேரா யுவா பாரத் கன்னியாகுமரி சார்பில், போதை பொருள் இல்லா இளைஞர் இந்தியா (நஷா முக்த் யுவா பாரத்) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
இளைஞர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஆரோக்கியமான மற்றும் பொறுப்புணர்வுமிக்க சமூகத்தை உருவாக்கவும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் முழக்க வாசகம், ஓவியப் போட்டி, நாட்டுப்புற நடனம், நாட்டுப்புறப் பாடல், மைம், குறும்படம் / ரீல்ஸ், ஸ்லாம் கவிதை, பேச்சுப் போட்டி உள்ளிட்ட 8 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் 900-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மு. பிரதாப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.



