தஞ்சாவூர், ஜூலை 7 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 728 மனுக்களை பொது மக்கள் கலெக்டரிடம் வழங்கினர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கிய கலெக்டர் இந்த மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து 2025- 26 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்படும் போதை பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மற்றும் தன்னார்வ குழுக்களில் மாவட்ட அளவிலான சிறந்து விளங்கிய முதல் 3 இடங்களைப் பெற்ற மன்றங்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு தொகையை கலெக்டர் ரேவதி வழங்கினார்.
தொடர்ந்து அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் 20 பேருக்கு நவீன செயற்கை கால், கைகள், 4 பேருக்கு காதொலிக் கருவிகள் என மொத்தம் 24 பேருக்கு ரூபாய் 35 லட்சத்து 16 ஆயிரத்து 280 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அவர் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பேருக்கு மின் மோட்டார் பொருத்தப்பட்ட எந்திரங்களையும் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சவுமியா, மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் உலகநாதன், முன்னாள் படை வீரர் நல துணை இயக்குனர் ஞான சேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.



