நாகர்கோவில், பிப். 3 –
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 19ம் தேதி வருகிறார். அன்று இரவு ஓய்வு எடுக்கிறார். 20ம் தேதி காலையில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிந்த திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார்.
இதில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் முழு உருவ சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மேலும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் நகராட்சி மேயருமான மகேஷ் அவரது சொந்த செலவில் கல்லடி விளையில் அமைத்துள்ள மு.க. ஸ்டாலின் படிப்பகத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். வருவாய்த்துறை, வேளாண்மை துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளையும் முதலமைச்சர் வழங்குகிறார். மேலும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் கொள்ளும் விழாவில் 25,000 மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. முதலமைச்சர் விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானம் அல்லது கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நடைபெறுவதாக தெரிய வருகிறது.


