தேனி, ஜூன் 8 –
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமானதாகக் கூறி, கடந்த சுமார் 40 ஆண்டுகளாக கடைகள் கட்டப்பட்டு வாடகை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த இடம் நீர்நிலைப் பகுதி என பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
நீர்நிலைப் பகுதியில் கடைகள் அமைக்கப்பட்டிருந்தால், பல ஆண்டுகளாக வாடகை வசூல் செய்யப்பட்டதற்கான பொறுப்பு யாருக்கு? பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தின் நிலை என்ன? என்ற கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் வழங்கப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்தக் கடைகளை நம்பி வாழ்வாதாரம் நடத்தி வந்த வியாபாரிகளின் கடைகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பல ஆண்டுகளாக வசூலிக்கப்பட்ட வாடகைத் தொகையை திருப்பி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



