நாகர்கோவில், ஜூன் 23 –
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில், 45 வயது பெண்ணுக்கு சுமார் ஐந்து வருடங்களாக வளர்ந்து வந்த ஃபில்லோட்ஸ்- மார்பகக் கட்டியை மார்பகத் தோற்றம் மாறாமலே முழுமையாக அகற்றி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. டாக்டர் லாலா ராபின் (புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்) மற்றும் டாக்டர் பெலிக்ஸ் கார்டீலியா (பிளாஸ்டிக், அழகு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்) இந்த புதியவகை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.
சிறியதாக தோன்றிய மார்பகக் கட்டியை சுமார் ஐந்து வருடங்களாக எந்த வகையான பரிசோதனையோ, சிகிச்சையோ மேற்கொள்ளாமல், மார்பகத்தை அகற்றிவிடுவார்கள் என்ற பயத்துடனும், மனசஞ்சலத்துடனும் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு, நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரை அணுகியதும் முழுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
பரிசோதனைகளின் முடிவில் அவருக்கு ஃபில்லோட்ஸ் வகையான மார்பகக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அந்த கட்டியின் அளவு சுமார் 10 செமீ அளவு இருந்ததால், கட்டியை அகற்றும்போது ஏறத்தாழ பாதி மார்பகம் அகற்றும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர்களுக்கு அழகு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையோடு சேர்ந்து ஆன்கோபிளாஸ்டிக் என்னும் புதிய முறையில் அறுவை சிகிச்சையை பிளாஸ்டிக், அழகு மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் இணைந்து செய்ய திட்டமிடப்பட்டது.
மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது கட்டி முழுமையாக அகற்றப்பட்டதா என்பதை கண்டறிய, ஃப்ரோசன் செக்ஷன் என்னும் திசு ஆய்வு முறையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யும்போது மார்பகக் கட்டியை அகற்றி, திசு ஆய்வில் அது முழுமையாக அகற்றப்பட்தை அறிந்ததும், மார்பகத்தின் தோற்றத்தை புனரமைப்பு செய்ய, ஆன்கோப்ளாஸ்டிக் முறையில், மார்பகத்தை வடிவமைத்து மறுபுறம் மார்பக அளவிற்கே மறு உருவாக்கம் செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பின்பும் எந்த சிக்கலும் இல்லாமல், வடிவமைத்த மார்பகத்தில் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் அந்த பெண் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். சிகிச்சை குழுவில் டாக்டர்கள் பாலாஜி, பினிட்டா ஷெரின் தீவிர மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் செவிலியர் குழுவும் இணைந்திருந்தனர்.
மார்பகத்தில் ஏற்படும் கட்டிகளை அகற்ற எப்போதும் முழு மார்பகத்தை அகற்ற வேண்டிய நிலை தற்போது இல்லை எனவும், கட்டிகளின் தன்மையை சரியான நேரத்தில் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சைகள் அளித்து முழுமையாக குணமடைய ஆன்கோபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தற்போது சிறந்த முறையில் கிம்ஸ்ஹெல்த் நாகர்கோவில் செய்யப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


