நாகர்கோவில், ஜூலை 3 –
நாகர்கோவில் பங்களா சாலை பகுதி சேர்ந்தவர் பெருமாள். வியாபாரி. இவருக்கு மூன்று நபர்கள் அறிமுகமானார்கள். அவர்களுடன் பெருமாள் இயல்பாக பழகி வந்திருக்கிறார். அப்போது அவர்களில் ஒருவர் தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவருடைய அவசர சிகிச்சைக்காக தனது முத்து மாலையை பெற்றுக் கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளார்.
அப்போது அவர்கள் கொண்டு வந்த அந்த நகையை நகை கடைக்கு கொண்டு சென்று பெருமாள் பரிசோதித்தார். அதில் இருந்த இரண்டு முத்துக்களும் தங்க முத்துக்கள் என தர உறுதி செய்யப்பட்டது. அந்த சங்கிலி 200 கிராம் எடை கொண்டது என்றும் அதற்கு பதிலாக 10 லட்சம் ரூபாய் தருமாறு அவர்கள் கேட்டனர்.
இதை அடுத்து அவரிடம் இருந்து முத்துமாலையை பெருமாள் வாங்கிக் கொண்டார். அதற்கு பதிலாக தனக்கு தெரிந்த பலரிடம் கடன் வாங்கி 10 லட்ச ரூபாயை அந்த நபர்களிடம் கொடுத்திருக்கிறார். முத்துமாலையை விற்று வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்று பெருமான் நினைத்துள்ளார். அதன்படி அந்த சங்கிலியை விற்பனை செய்ய கொண்டு சென்றார். அப்போது அந்த முத்துமாலை போலியானது என்பது தெரிய வந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெருமாள் தன்னிடம் பணம் வாங்கிய நபர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. எனவே போலி முத்துமாலை கொடுத்து ரூ. 10 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீதும் வடசேரி போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட 3 நபர்கள் யார்? என அடையாளம் காணும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


