நாகர்கோவில், ஜூன் 25 –
வளைகாப்பு என்பது கர்ப்பிணிப் பெண்ணை வாழ்த்தி அவளது கருவுற்ற நிலையைக் கொண்டாடும் ஒரு சடங்கு ஆகும். இது பொதுவாக தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்படுகிறது. இந்தப் பாரம்பரிய விழாவில் கர்ப்பிணிப் பெண்ணுக்குக் கண்ணாடி வளையல்கள் அணிவித்து பலவிதமான இனிப்பு மற்றும் கார வகை உணவுகள் பரிமாறப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும். ஏழாவது அல்லது ஒன்பதாவது மாதங்களில் உறவினர்கள் சூழ வளைகாப்பு நடத்தப்படுவதால் கர்ப்பிணிப் பெண்களுக்குப் பிரசவம் பற்றிய பயங்கள் மன அழுத்தங்கள் நீங்கி அவர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளிக்கிறது. மேலும் 7 அல்லது 9 மாதத்தில் கருவில் இருக்கும் குழந்தை தாய் அணிந்திருக்கும் வளையல் சத்தத்தைத் தொடர்ந்து கேட்பதால் அக்குழந்தையின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது. அந்த வகையில் 22.06.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தம்பதியர்களான ஹரிஹரன் மனைவி சக்திவர்தனா நிறைமாத கர்ப்பிணி ஆவார். அவரின் வயிற்றில் வளரும் குழந்தையை வரவேற்கும் வகையில் பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சக்திவர்தனாவிற்கு பாரம்பரிய முறைப்படி வளையல் அணிவித்து புத்தாடை அணிவித்து சீர்வரிசைகள் வழங்கி சுகப் பிரசவத்திற்காக குடும்பத்தினர் அனைவரும் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி வரவிருக்கும் குழந்தைக்குப் பரிசுகள், நல் ஆசி மற்றும் வாழ்த்துக்களை வழங்கினர். அதன் பின் உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி
விளையாட்டுகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து தாய் மற்றும் குழந்தையின் நல் வாழ்விற்காக இறைவனிடம் வேண்டுதல்கள் செய்தனர். இது கர்ப்பிணிப் பெண்ணுக்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தியது. குடும்பங்களுக்கு இடையே உள்ள பிணைப்பை வலுப்படுத்தவும் மற்றும் அன்பையும் மகிழ்ச்சியையும் இந்த பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி ஏற்படுத்தியது. இதன் பின்னர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் கருவுற்ற பெண்ணின் கணவர் அப்பெண்ணுக்கு மாலை அணிவித்து நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து இரு கைகளிலும் கன்னங்களிலும் சந்தனத்தைப் பூசி நலுங்கு சடங்கு செய்தார். பின்பு இரு கைகளிலும் வளையல் அணிவித்து பன்னீர் தெளித்து அறுகரிசி படைத்து தனது மனைவியையும் கருவிலிருக்கும் குழந்தையையும் வாழ்த்தினார். இதற்கு பின்னர் அனைத்து உறவினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து சந்தனம் நலுங்கு வைத்து குங்குமம் இட்டு பன்னீர் தெளித்து அறுகரிசி படைத்து ஆசி வழங்கினர். இறுதியில் வயதான சுமங்கலி பெண்கள் வளைகாப்பு முடிந்த பெண்ணுக்கு திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கருவுற்ற பெண்ணின் சேலை முந்தானையில் மடி நிறைய இனிப்பு வகைகள் வைத்து தனது தாய் வீட்டிற்கு பெரியோர்கள் ஆசி வழங்க அனுப்பி வைக்கப்பட்டார்.