நாகர்கோவில், மே 9 –
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கிஷோர் சிலுவைகண் (41). சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரியும் இவர் பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவியின் சொந்த ஊர் நாகர்கோவில் கோட்டார் பகுதியாகும். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் குடும்பத்துடன் இவர்கள் நாகர்கோவில் வந்திருந்தனர். நாகர்கோவில் கோட்டார் டிடிவி காலனி பகுதியில் உள்ள மனைவியின் வீட்டில் தங்கி இருந்தனர்.
இவர்களின் மகன் கெய்சர் பெர்ல் (8) நேற்று மாலை வீட்டின் கட்டிலில் படுத்திருந்தார். திடீரென தூக்க கலக்கத்தில் கட்டில் இருந்து தவறி கெய்சர் கீழே விழுந்தார். இதில் அசைவின்றி அவர் கீழே கிடந்துள்ளார். உடனடியாக அவரை நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். பின்னர் முதல் உதவிக்கு பின் அந்த நிலையில் அங்கு நிலைமை மோசமாக இருந்ததால் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.
மருத்துவ கல்லூரி டாக்டர்கள் பரிசோதனையில் சிறுவன் கெய்சர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இது குறித்து கோட்டாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


