கன்னியாகுமரி, செப்.04.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பேரூராட்சி மற்றும் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் பொதுமக்களின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு ரூ.3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விபத்து அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மையத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். பல்வேறு பிரிவுகளுடன் கட்டப்பட்டு வரும் இக்கட்டிடப் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும், பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து நடுக்கரை பகுதியில் ரூ.16.65 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தையும், பூதப்பாண்டி ப.ஜீவானந்தம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திடல் பகுதியில் ரூ.7.11 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குளம் அமைக்கும் பணியையும், அருமநல்லூரில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் அவர் பார்வையிட்டார். மேலும், சகாயநகர் ஊராட்சிக்குட்பட்ட திருமலைப்புரத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தையும் ஆய்வு செய்தார்.
நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.



