தருமபுரி, மே 02 –
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே பொய்பட்டி கிராமத்தில் வசித்து வரும் திருமால் செல்வன் (55), அவரது தாய் வேடியம்மாள் (80), மனைவி கலைவாணி (40) ஆகிய மூவரும் வீட்டில் இருக்கும் பொழுது ஏற்பட்ட பலத்த சூறாவளி காற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வீசிய கடும் காற்றின் தாக்கத்தில், அவர்களின் குடியிருப்பு வீடு முற்றிலும் சேதமடைந்துள்ளது.
குறிப்பாக, திருமால் செல்வன் கடந்த 10 ஆண்டுகளாக 90% ஊனமுற்ற நிலையில் இருப்பதால், குடும்பம் மிகவும் சிரமமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது வீடு சேதமடைந்ததால் அவர்கள் தங்குமிடம் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனை முன் வைத்து சம்பந்தப்பட்ட வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டுமென குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



