தருமபுரி, ஜூன் 20 –
தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் முன்னிலை வகித்தார். மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் ஆ.மணி எம்பி தலைமை தாங்கி பேசியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், மக்கள் வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கும் இணையற்ற பலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்களை அரசுத்துறை அலுவலர்கள் குறித்த காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும். அரசியல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏதேனும் சிரமங்கள் இருப்பின் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது அதற்குரிய தீர்வை கண்டறிந்து திட்டங்கள் கால தாமதம் இன்றி விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார். இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, சம்பத்குமார், கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மக்கள் திட்ட இயக்குனர் லலிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற் பொறியாளர் பாலகிருஷ்ணன், நல குழு உறுப்பினர்கள் முத்துலட்சுமி, சரவணன், ராஜகோபால் மற்றும் அனைத்து துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



