தருமபுரி
மாவட்ட
காவல்
துறை சார்பில் சாலை பாதுகாப்பு,உயிர் பாதுகாப்பு மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியனது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து நான்கு ரோடு வரை பேரணியாக சென்றனர். இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தனர். இந்தப் பேரணியில் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய தேவராஜ் முன்னிலை வகித்தார். இந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியில் காவலர்கள், மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தின் பணியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் ஹெல்மெட் அணிந்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறியதாவது. தருமபுரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும். சாலை விபத்துகளில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளின் இறப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க தருமபுரி மாவட்டத்தில் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் மற்றும் காவல்துறை அலுவலர்கள் சாலை பாதுகாப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுவதை கண்காணித்து விதிமுறைகளை மீறிச்செயல்படும் நபர்கள் மீது கடுமையான அபராதம் மற்றும் தொடர் நடவடிக்கை மேற்கொள்வார்கள் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆட்சியர் ஹெல்மெட் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் கலால் உதவி ஆணையர் நர்மதா, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், காவல்துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



