தருமபுரி, செப். 3:
தருமபுரியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில், கண் தானத்தின் அவசியம் மற்றும் அதன் மூலம் பார்வையற்றோருக்கு பார்வை கிடைக்கச் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது. பேரணியை மருத்துவ ஊரகப் பணி இணை இயக்குனர் பாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஸ்ரீராமா போர்டிங் அருகே உள்ள மருத்துவமனை வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கியது.
பேரணியில் பங்கேற்றவர்கள் கண் தானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். நெசவாளர் காலனி, நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்ற பேரணி ரோட்டரி மஹால் அருகே நிறைவடைந்தது. மருத்துவமனை ஊழியர்கள், தருமபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையற்றவர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, கண் தானம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதுடன், அதன் முக்கியத்துவத்தை குடும்பத்தினரிடமும் எடுத்துரைக்க வேண்டும் என நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.



