தஞ்சாவூர், ஜூலை 9 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் ரேவதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் தேசிய கால்நடை இயக்கத்தின்கீழ் கால்நடை காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திட்டத்தின் கீழ் ஒரு முறை கன்று ஈன்ற பசு, எருமை, செம்மறி ஆடு, வெள்ளாடு மற்றும் பன்றிகள் என மொத்தம் 2,900 கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்பட உள்ளது.
காப்பீட்டு காலம் ஒரு ஆண்டாகும் மொத்த காப்பீடு கட்டணத்தில் 85 சதவீதத்தை அரசு மானியமாக வழங்கும் மீதமுள்ள 15 சதவீத தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்த வேண்டும். ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள கால்நடைகளுக்கு பயனாளி செலுத்த வேண்டிய பிரீமியம் ரூபாய் 50.25 ஆகும். அதற்கு மேல் மதிப்புள்ள கால் நடைகளுக்கு கூடுதல் பிரிமியம் தொகையை பயனாளியே செலுத்த வேண்டும்.
பசு மற்றும் எருமைகளுக்கு காப்பீடு பிரிமியம் 1.25 சதவீதமாகும். செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் பன்றிகளுக்கு 1.65 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை கன்று ஈன்ற பசு மற்றும் எருமைகள் 2 1/2 வயது முதல் 8 வயது வரை காப்பீடு செய்யப்படலாம். ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் 10 மாடுகள் வரை காப்பீடு செய்ய அனுமதிக்கப்படும்.
செம்மறியாடு மற்றும் வெள்ளா டுகள் 1 வயது முதல் 3 வயது வரை யிலும் அதிகபட்சம் 10 ஆடுகள் வரையிலும் காப்பீடு செய்யலாம் பன்றிகள் 1 முதல் 5 வயது வரை காப்பீடு செய்யலாம். இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை உதவி மருத்துவரை தொடர்பு கொள்ளலாம். இந்தத் திட்டம் வருகிற 30.9.2026 க்குள் செயல்படுத்தபட உள்ளதால் தகுதி உள்ள கால்நடை வளர்ப்போர், விவசாயிகள் உரிய ஒத்துழைப்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.



