தஞ்சாவூர், மே 8 –
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் மாணவ மாணவிகளை சேர்க்க முன்வருமாறு பெற்றோர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 3 மேல்நிலைப் பள்ளிகளும், 7 உயர்நிலைப் பள்ளிகளும், 6 நடுநிலை பள்ளிகளும், 84 தொடக்கப் பள்ளிகளும் என மொத்தம் 100 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளியில் 1 முதல் 12 வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை மற்றும் ஆறு முதல் 12 வரை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் பல்வேறு சலுகைகளும், விடுதி வசதிகளும் வழங்கப்பட்டு வருவதால் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றோர்கள் அருகில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலப் பள்ளியில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



