திருச்சி, ஜூலை 30 –
பழனி கோவில் நில மோசடி விவகாரத்தை தொடர்ந்து தற்போது அமைச்சர் ரமேஷ் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வரும் நிலையில் அதனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஷூ அணிந்துகொண்டு ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்து அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்து சமய நம்பிக்கை மற்றும் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக காலில் ஷு அணிந்து பார்வையிட்டதை கண்டிக்கிறோம் என்றும், பழனி கோயில் நில முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அமைச்சர் ரமேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.
திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கடந்த சனிக்கிழமை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர பகுதியில், அமைச்சர் ரமேஷ் காலில் ஷூ அணிந்தபடி சென்று ஆய்வு செய்தார். கோவில் வளாகத்திற்குள் ஷூ அணிந்தபடி அமைச்சர் சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இது குறித்து பக்தர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பக்தர்கள் கூறும் போது, “பூலோக வைகுண்டம் என்று ஸ்ரீரங்கம் போற்றப்படுகிறது. புண்ணிய ஸ்தலமான ஸ்ரீரங்கம் கோவிலில் ஷூ’ அணிந்தபடி அமைச்சர் ரமேஷ், கோபுர பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்து இருப்பது அதிர்ச்சியை தருகிறது. இந்த விவகாரம் குறித்து அமைச்சர் ரமேஷ் தனது விளக்கத்தை தர வேண்டும” என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கறிஞரும், இந்து திருக்கோயில் மீட்பு இயக்கம் நிறுவனர் மகேஸ்வரி வையாபுரி கூறுகையில், பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீ ரங்கம் கோயில் மிகவும் புனிதமான ஸ்தலம். இக்கோயிலில் அமைச்சர் `ஷூ’ அணிந்து கொண்டு கோபுர பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றது.
ஸ்ரீரங்கம் பெருமாள் வீதி உலாவரும் திருவீதிச்சுற்றிலே கூட பெரியவர்கள் காலணி அணிந்து செல்ல மாட்டார்கள். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சருக்கு இது கூட தெரியாதா? ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரத்தில் காலணி அணிந்து ஆய்வு செய்தது பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது .
இதற்காக அமைச்சர் பக்தர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுகுறித்து அமைச்சர் விளக்கமும் அளிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் கவனம் செலுத்த வேண்டும். நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.
இது குறித்து இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், “அமைச்சார் ரமேஷ் மன்னிப்பு கேக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராம ரவிக்குமார் கூறுகையில், “ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி திருக்கோயில் கிழக்கு கோபுரம் திருப்பணி பார்வையிடச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஷூ அணிந்து கொண்டு கோபுரத்தில் ஏறியது கண்டனத்திற்குரியது.
ராஜனுக்கு ராஜனான ரங்கராஜனின் கிழக்கு கோபுரம் திருப்பணி பார்வையிட சென்ற இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் திருக்கோயில் அதிகாரிகள் தவெக கட்சியினர் மற்றும் பலர் கை உயர்த்தி தொழும் ஸ்ரீரங்கம் ரங்கனின் கிழக்கு கோபுரத்தில் கிருஷ்ணர் சன்னதி அமைந்த இடத்திற்கு மேலே இந்து சமய நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் வகையில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அரசு அதிகாரத்தில்; அமைச்சர் என்ற ஆணவத்தில் காலில் ஷூ அணிந்து கொண்டு பார்வையிட சென்றது வன்மையான கண்டனத்திற்கு உரியது. கோடான கோடி மக்கள் வணங்கும் அரங்கனின் கோபுரத்தின் மீது ஷூ காலுடன் சென்று பார்வையிட்டது ஏற்றுக்கொள்ள இயலாதது வன்மையான கண்டனத்திற்குரியது.
அமைச்சர் பதவி என்பது ஐந்து ஆண்டுகள் தான் அதிகார மமதைதியில் இதற்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் இருந்த பல அமைச்சர்களின் வரலாறுகளை தற்போதைய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். கடவுள் இல்லை என்று சொல்லும் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூட செய்யத் துணியாத செயலை காலில் ஷூ அணிந்து கொண்டு பொறுப்பு மிக்க அமைச்சர் பதவியில் இருந்து கொண்டு செய்தது துளியும் ஏற்றுக் கொள்ள இயலாது .
ஸ்ரீரங்கம் அரங்கனின் வீதிகளில் காலில் செருப்பு அணியாது அரங்கனின் மீது பக்தி கொண்ட பல்லாயிரக்கணக்கான பாகவத பெரியவர்களின் பக்தி உயர்வானது. அமைச்சர் என்ற அகங்காரத்தில் காலில் ஷூ அணிந்து பார்வையிட சென்றது நாளை யார் வேண்டுமானாலும் கோயிலுக்குள் கூட செருப்பு அணிந்து செல்லலாம் என்ற தவறான முன்னுதாரணத்தை பொறுப்பு மிக்க அமைச்சர் செய்திருக்கிறார். இதற்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் பொதுவெளியில் மன்னிப்புக்கு கோர வேண்டும். ஸ்ரீரங்கம்திருக்கோயில் நிர்வாகம் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
மன்னாண்ட மன்னவர்கள் பலரையும் மண்ணில் பார்த்து கிடந்த கோலத்தில் இருந்த இடத்திலிருந்து அரசாட்சி செய்யும் அரங்கனை விட இந்த அமைச்சர் ஒன்றும் பெரிய ஆள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.



