நாகர்கோவில்,ஏப்.18-
குமரி மாவட்டத்தில் டாரஸ் லாரிகளால் ஏற்படும் சாலை விபத்தை பொருட்படுத்தாமல் வாழ்வாதாரம் பாதித்துவிட்டதாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்ட சம்பவம் குமரி மாவட்ட மக்கள் மற்றும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டவர்களின் குடும்பத்தார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தில் கனிமவளம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் தொடர்ச்சியாக இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, நான்கு வழிச்சாலை பணிகள் முடியும் வரை கேரளாவுக்கு கனிமவளம் கொண்டு செல்லும் லாரிகளுக்கு தற்காலிக தடை விதித்தார். இது தொடர்பாக லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தக்கலை மாணவி விபத்தில் இறந்த வழக்கில், தமிழ்நாட்டில் முதல்முறையாக லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்து எஸ்பி ஸ்டாலின் தொடர் டாரஸ் லாரி விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தொடக்கத்தை நிகழ்த்தியுள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்பி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு டாரஸ் லாரிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தார்.
எஸ்.பி.யின் கடும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து 1000 லாரிகள் வரை சென்ற நிலை மாறி 300 லாரிகள் வரை எண்ணிக்கை குறைந்தன.
இருப்பினும் இந்த டாரஸ் லாரிகளால் விபத்துக்கள் தொடர் கதையாகி வருகிறது.
தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனிமவள டாரஸ் லாரிகள் குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு செல்கிறது. ஆரம்ப காலத்தில் இந்த கனிமவள டாரஸ் லாரிகளால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக காலை 8 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை கனிமவள டாரஸ் லாரிகள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் வழக்கம்போல் கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் இரவு வரை
கனிமவள டாரஸ் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரமான இரவு 9 மணிக்கு மேல் இந்த கனிம வள டாரஸ் லாரிகள் அதிவேகமாக செல்வதால் மற்ற எந்த வாகனங்களும் சாலையில் செல்ல முடிவதில்லை.
நூற்றுக்கணக்கான கனிம வள டாரஸ் லாரிகள் ஒரே நேரத்தில் செல்வதாலும் ஒரு லாரியை முந்தி இன்னொரு லாரி செல்லும்போது சாலையில் மற்ற எந்த வாகனங்களும் செல்ல முடிவதில்லை.
மேலும் இந்த கனிமவள டாரஸ் லாரிகள் மற்ற வாகனங்களை பொருட்படுத்தாமலும், குறுகிய சாலை என்றும் பாராமல் வேகமாக முந்தி செல்வதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் மோதி அவ்வப்போது விபத்தும் நடந்து விடுகிறது.
அவ்வாறு கனிம வள டாரஸ் லாரிகளால் ஏற்படும் விபத்துகளினால் குடும்பத் தலைவர், குடும்பத் தலைவி, பிள்ளைகள் போன்றவர்களை இழந்த குடும்பங்கள்தான் குமரி மாவட்டத்தில் அதிகம் எனலாம். ஆனால் உயிர்பலியை பற்றி சிறிதும் கவலைப்படாத கனிம வளர டாரஸ் லாரி ஓட்டுநர்கள் எத்தனை விபத்துகள் நடந்தாலும் உயிர்பலிகள் ஏற்பட்டாலும் வழக்கம்போல் தங்களுடைய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கனிம வளம் டாரஸ் லாரிகளால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர் படும் இன்னல்கள், வேதனைகள் போன்றவைகள் யாரும் அறிந்திருக்க முடியாது. குறிப்பாக ஒரு குடும்பத் தலைவர் விபத்தில் இறந்தால் அந்த குடும்பமே நடுத்தெருவுக்கு வந்துவிடும், அதேபோல் குடும்பத் தலைவி விபத்தில் இறந்தால் அந்த குடும்பம் சின்னாபின்னம் ஆகிவிடும். மேலும் விபத்தில் ஒரு குடும்ப உறுப்பினர் இறந்தால் அந்தக் குடும்பத்தின் கதையே முடிந்து போய் விடுகிறது. இது எல்லாம் வேகமாக செல்லும் கனிம வள டாரஸ் லாரிகள் ஓட்டும் ஓட்டுநர்களுக்கும் உரிமையாளர்களுக்கும் என்னவோ தெரிவதில்லை.
அண்மையில் தக்கலை பகுதியில் இரவில் கனிம வள டாரஸ் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதின் விளைவு சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து முதல்முறையாக ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்த சம்பவம் ஒரு உயிரை பறிகொடுத்த குடும்பத்திற்கு பெரும் ஆறுதலாக அமைந்தது. மேலும் மாவட்ட எஸ்பியை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் உடனடியாக தடை விதித்து உத்தரவிட்டார்.
இப்படி மாவட்ட மக்கள் நலனில் அக்கறை உள்ள எஸ்பி மற்றும் ஆட்சியர் ஆகியோரின் அதிரடி நடவடிக்கையில் ஆடிப் போன கனிமவள டாரஸ் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்து தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டதாகவும் 5000 குடும்பங்களுக்கு மேல் இந்த தொழிலை நம்பி இருப்பதாகவும், எஸ் பி மற்றும் ஆட்சியர் போட்ட உத்தரவை ரத்து செய்து வழக்கம்போல் கனிமவள டாரஸ் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனவும் கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் மிரட்டல் விட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களின் போராட்டம் குறித்து பொதுமக்கள் தின தமிழ் நாளிதழுக்கு கொடுத்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது: சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கனிம வள டாரஸ் லாரிகளால் வாழ்ந்து வருவதாகவும் இதனை தடை செய்ததால் 5000 குடும்பங்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக தடைபட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மிகவும் இரக்கமற்ற கொடூர செயலென தெரிவித்த பொதுமக்கள் இந்த ஐயாயிரம் குடும்பங்களிலும் உள்ள குடும்ப தலைவர் குடும்ப தலைவி, பிள்ளைகள் நலமுடன் உள்ளனர். இவர்களுக்கு வேறு வேலை செய்யலாம் காரணம் இவர்கள் மிகவும் தெம்புடனும் துடிப்புடனும் முக்கியமாக உயிருடன் உள்ளனர். 5000 குடும்ப உறுப்பினர்களும் மாற்று வேலை தேடிக் கொள்ளலாம் அவ்வாறு செய்யும் பட்சத்தில் வாழ்வாதாரம் பாதிக்காது.
ஆனால் இவர்களால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த குடும்பத்தில் உள்ளவர்கள் ஒரு உயிரை இழந்து வாடுவது மட்டுமல்லாமல் முழுமையாக வாழ்வாதாரத்தை இழந்து பரிதாபத்திற்குரிய நிலையில் உள்ளனர்.
கனிம வள டாரஸ் லாரிகளால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்கள் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்பதையும் நம்மால் காண முடிகிறது. மேலும் கனிமவள டாரஸ் லாரி ஓட்டும் ஓட்டுநர்கள் இந்த தொழில் இல்லை என்றால் எந்த தொழில் வேண்டுமென்றாலும் நலமுடன் செய்யலாம் அதை விட்டுவிட்டு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஒன்றிணைந்து ஆட்சியர் அலுவலகம் வந்து வாழ்வாதாரம் பாதித்து விட்டதாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களின் இத்தகைய செயல் மாவட்ட ஆட்சியரையே மிரட்டுவது போல் உள்ளது.
இதுவரை இல்லாத ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எடுத்துள்ளனர். இதில் அவர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். இனி ஒரு உயிரிழப்பு கனிமவள டாரஸ் லாரியால் இந்த மாவட்டத்தில் நடைபெறக்கூடாது.
கனிம வள டாரஸ் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமே பார்க்கின்றனர். இவர்களால் ஏற்பட்ட விபத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இவர்கள் ஒரு வார்த்தை ஆறுதல் கூட சொல்லவில்லை. மேலும் தங்களால் இனி உயிர் பலி எதுவும் ஏற்படாது என்கின்ற உத்தரவாதமும் கூட இவர்கள் வாயில் இருந்து வரவில்லை.
என்னதான் இந்த லாரி உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் நினைத்து இருக்கிறார்கள். பொதுமக்கள் உயிர் என்ன இவர்களுக்கு கிள்ளுக்கீரையா? எனவும் பொதுமக்கள் ஆக்ரோச கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியது போல வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவோம் என இவர்கள் தரப்பிலிருந்து முழுமையாக தெரிவிக்கப்படவில்லை தொடக்க முதல் முடிவு வரை இவர்கள் தங்கள் பிரச்சனையை மட்டுமே பார்க்கின்றார்களே தவிர பொதுமக்களின் பிரச்சனைகளை நினைத்து கூட பார்க்கவில்லை என்பது என்னவோ நிசர்தமான உண்மை.



