நாகர்கோவில், செப். 20 –
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.3.9 கோடி மதிப்பில் 12 வகுப்பறைகள், 1 ஆய்வகம், இரண்டு கழிவறைகள், குடிநீர் வசதி ஆகிய பணிகளும், வடசேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.94.24 இலட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறைகள், அனந்தநாடார்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.47.12 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் ரூ.4.61 கோடி மதிப்பிலான புதிய பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டன.
மேலும் கொட்டாரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.71 கோடி மதிப்பில் 6 வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள், மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும், கடியபட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.98.96 இலட்சம் மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், குமாரபுரம் தோப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.26 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள், சுற்றுச்சுவர் கட்டும் பணிகளும், காட்டாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1.19 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், இரண்டு கழிவறைகளும், கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.13 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், சுற்றுச்சுவர் கட்டுதல் மற்றும் குடிநீர் வசதி பணிகளும், கொல்லங்கோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.64.47 இலட்சம் மதிப்பில் ஒரு ஆய்வகம், வீயன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.49 கோடி மதிப்பில் 6 வகுப்பறை கட்டிடங்களும், அனந்தமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.1.09 கோடி மதிப்பில் நான்கு வகுப்பறைகளும், ஒரு கழிவறைகளும், கொடுப்பைக்குழி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.69.62 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள், இரண்டு கழிவறைகள் என மொத்தம் ரூ.10.20 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.
இதன் திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடக்கி வைத்தார். தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா தலைமையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மனோதங்கராஜ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை மேரி பிரின்சி லதா, எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மரிய பாக்கியசீலன், ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



