பூதப்பாண்டி, ஆகஸ்ட் 23 –
பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் அருள்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (65). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தன்னுடைய சகோதரி வீட்டில் வசித்து தாரா கோழிகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் வெளியே சென்றவர் பூதப்பாண்டியை அடுத்துள்ள அரசன் குழி பகுதியில் நேற்று பிற்பகல் சாலையோரமாக தரையில் படுத்து கிடந்துள்ளார்.
அந்த வழியாக வந்தவர்கள் அவரை அருகில் சென்று பார்க்கும் போது அவர் அசைவற்று கிடந்துள்ளார். உடனே பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பார்க்கும் போது முதியவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.



