கன்னியாகுமரி, பிப். 7-
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் 7வது ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவையும் அதைத் தொடர்ந்து 8 மணிக்கு புண்ணியாகவாசனம், அங்குரார்பனம், ரக்சாபந்தனம், விசேஷ ஹோமம், அஸ்டோத்திர ஸத கலசாபிஷேகம் உற்சவமூர்த்திக்கு மகா சாந்தி ஹோமம், பூர்ணாகுதி, அச்சதாரோபனம் போன்றவை நடக்கிறது.
அதைத்தொடர்ந்து சதாகலசாபிஷேக பூஜை நடக்கிறது. அதன் பிறகு சுவாமிக்கு திருமஞ்சனம் சாத்துதலும், பகல் 11 மணிக்கு யாகசாலை பூஜையும் நடக்கிறது. பின்னர் ஹோமம், யாகம், அபிஷேகம் தீர்த்த பிரசாதம் வழங்குதல் போன்றவைகள் நடைபெறுகின்றன. பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது.
இந்த பூஜைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகம ஆலோசகர் தலைமையில் திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 3 பேரும், கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர்களும் நடத்துகிறார்கள். பின்னர் பகல் 12 மணிக்கு பக்தர்க ளுக்கு அன்னதானம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் லோகேஷ், கண்காணிப்பாளர் லட்சுமிபதி ஆகியோர் செய்துள்ளனர்.


