நாகர்கோவில், மார்ச் 17 –
சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.04.2026 நடைபெறுவதை முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அச்சகம், திருமண மண்டபம் மற்றும் கூட்டரங்கு உரிமையாளர்கள் கடைபிடிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்: திருமணக்கூடம் மற்றும் கூட்ட அரங்கில் திருமணம் மற்றும் சுப நிகழ்வுகள் தவிர வேறு எவ்வித அரசியல் தொடர்புடைய கூட்டங்கள் நடைபெற பதிவு செய்யப்பட்டால், அதன் விவரத்தினை முன்கூட்டியே தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட அறிவுறுத்தப்பட்டது. சுபநிகழ்வுகள் என்ற பெயரில் மக்களை கூட்டி பரிசு பொருட்கள் வழங்குவது, புடவை, வேட்டிகள், மதுபாட்டில்கள் வழங்குவது மற்றும் பணம் கொடுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறியப்பட்டால், அதனை உடனடியாக தொடர்புடைய தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அரசியல் கட்சித் தலைவரின் பெயர்கள் மற்றும் உருவங்கள் பொறித்த தட்டிகள், பதாகைகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் ஆகியவற்றினை வைத்து வாக்குகள் சேகரிக்கும் நிகழ்வுகள் எதுவும் நடைபெறக் கூடாது, தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் நடைபெறும் காலங்களில் விடுதிகளில் தங்க அனுமதி கோரும் நபர்களிடம் உரிய அடையாள அட்டைகளை சரிபார்க்க வேண்டும். மேலும், ஆதார் (அல்லது) புகைப்பட அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை நகல்களை பெற்ற பின்னரே தங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். விடுதிகளில் தங்கும் நபர்கள் பற்றிய முழு விவரம் தொலைபேசி எண், தங்குவதற்கான காரணம் ஆகியவை பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் என விடுதி உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அச்சகங்களில் தேர்தல் தொடர்பான பிரசுரங்கள், போஸ்டர், நோட்டீஸ், துண்டு பிரசுரங்கள் ஆகியவை அச்சடிக்கும் நேர்வுகளில் அரசியல் கட்சிகள் பெயர், எண்ணிக்கை ஆகிய விபரங்கள் புதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். அச்சடிக்கப்படும் நோட்டீஸ், போஸ்டர் ஆகியவற்றில் எவர் மனதையும் பர்படும் வகையில் தரக்குறைவான வாசகங்கள் இடம் பெறக்கூடாது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பாளர்களின் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே அச்சக உரிமையாளர்கள் தேர்தல் தொடர்பான பிரசுரங்களை அச்சடிக்க வேண்டும் என தெரிவித்தார்.
நடைபெற்ற கூட்டத்தில் அச்சகம் மற்றும் திருமண மண்டபம் மற்றும் கூட்டரங்கு உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.



