கன்னியாகுமரி, ஆக. 3 –
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் தோமையார் மகன் முத்துவீரன் (20). இவர் தற்போது கன்னியாகுமரி அருகே நாச்சியார் குளத்தங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணி மகன் மதுரை வீரன் என்பவர் கடந்த சில தினங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தோமையாருக்கு தொடர்பு உள்ளதாகவும், அதனால் அவர் மீது மணியின் மகன்கள் சத்யா (26), பரமசிவம் (22), சுப்பையா (24), மணிகண்டன் (19) ஆகியோர் கோபத்தில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முத்துவீரன் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு சரக்கு வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சத்யா, பரமசிவம், சுப்பையா, மணிகண்டன் மற்றும் சிலர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வாகனத்தில் இருந்து குதித்து அங்கு நின்ற முத்து வீரனை வழிமறித்து தங்களது சகோதரன் கொலையில் உனது தந்தைக்கு தொடர்பு உள்ளது என்றும், தங்களது சகோதரன் சென்ற இடத்திற்கு நீயும் போ எனக் கூறி ஆயுதங்களால் அவரை தாக்கினர்.
உடனடியாக முத்துவீரன் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை தொடர்ந்து துரத்தி சென்று கழுத்தில் வெட்ட முயன்றனர். ஆனால் முத்து வீரன் விலகிக் கொண்டதால் தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்ததால் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த முத்துவீரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்ய முயன்ற சத்யா, பரமசிவம், சுப்பையா மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


