கன்னியாகுமரி, ஜூலை 13 –
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினந்தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கான வந்து செல்வது வழக்கம். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் சூரிய உதயத்தை பார்த்து விட்டு கடலில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறை நாளை முன்னிட்டு காலை முதலே கணிசமான அளவில் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வர தொடங்கினர். இதை அடுத்து திரிவேணி சங்கமத்தில் நின்றவாறு கடலில் இருந்து உதித்து வந்த சூரியனை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பெரும்பாலானோர் தங்களது செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து காந்தி, காமராஜர் மண்டபங்கள், காட்சி கோபுரம் உள்ளிட்ட இடங்களிலும் அதிகமாக சுற்றுலா சென்று சுற்றி பார்த்தனர். பின்னர் காலை 8 மணி முதல் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் படகு சேவை தொடங்கியது.
இதை ஒட்டி பயணிகள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து, கடலில் படகில் சென்று கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபம், கண்ணாடி பாலம் உள்ளிட்ட இடங்களை சென்று சுற்றி பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரியில் நேற்று காலை முதலே வெயில் அதிக அளவில் இருந்தது. கன்னியாகுமரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



