மார்த்தாண்டம், பிப். 2 –
குமரி மாவட்டத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 12 சிவாலயங்களில் மஹா சிவாலய ஓட்ட தரிசனம் நடைபெறுவது வழக்கம். இந்த 12 சிவாலயங்களில் 2 வது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் கோயில் நுழைவு வாயிலில் இருந்து கோயில் செல்லும் சாலை 18 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அதன் பிறகு இதுவரை சாலை செப்பனிட நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை சீரமைக்க பல முறை பக்தர்கள் மற்றும் இந்து அமைப்புகள் பாகோடு பேருராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பயணம் திக்குறிச்சி பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனை கண்டித்து நேற்று விஷ்வஹிந்து பரிசத் மற்றும் பக்தர்கள் இணைந்து 18 ஆண்டுகளுக்கு முன்பு சாலை போடப்பட்ட போது வைக்கப்பட கல் வெட்டிற்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ஊர்வலமாக வந்து கோயில் கோசாலை பசு மாட்டுக்கும், அது போன்று தாமிரபரணி நதிக்கும் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஏராளமான விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி மற்றும் சிவ பக்தர்கள் கலந்து கொண்டனர். 3 ஆண்டுகளுக்கு முன்பு கோயில் அருகே தாமிரபரணி ஆறோடு சேர்ந்து பக்கச்சுவர் கட்ட 84 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அடிக்கல் நாட்டியும் இது வரை பணிகள் துவங்காமல் இழுத்தடிப்பு செய்வதாகவும் குற்றம் சாட்டினர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் மேல்புறம் ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இந்து முன்னணி மாநில செயற்குழு உறுப்பினர் குழிச்சல் செல்லன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளர் பிபின், பஞ்சாயத்து பொறுப்பாளர் செல்வராஜ், பாஜக மேல்புறம் ஒன்றிய துணை தலைவர் ஐயப்பன் உட்பட விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் சிவ பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.



