கிருஷ்ணகிரி, மார். 17 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. ஆன்லைன் மூலம் பதிவு செய்து பணம் செலுத்திய பிறகும், குறிப்பிட்ட நேரத்தில் சிலிண்டர் கிடைக்காததால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் பலர் நேரடியாக விநியோக அலுவலகங்களை நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அலுவலகங்களில் அதிகமான கூட்ட நெரிசல் உருவாகி, பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.
குறிப்பாக RLR Indane Gas ஏஜென்சி மீது மக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். ஆன்லைனில் பதிவு செய்த பிறகு கிடைக்கும் OTP முறையை பின்பற்றாமல், நேரில் வந்து ரசீது பெற்ற பிறகே சிலிண்டர் வழங்கப்படும் என விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் புத்தகத்தை ஒப்படையுங்கள், 45 நாட்களுக்கு பிறகு வாருங்கள் என கூறப்படுவதால், அவசர தேவைகளுக்கு சிலிண்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: டெலிவரி கட்டணம் என அனைத்து சிலிண்டர்களுக்கும் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வீடு தேடி வழங்காமல், அலுவலகத்துக்கே வரவழைத்து சிரமப்படுத்துகிறார்கள். 45 நாட்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அதேபோல், அலுவலகத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலில் ஏதேனும் அசம்பாவங்கள் நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என நிர்வாகம் பதில் அளித்தது மக்களிடையே மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, விநியோக முறையை சீரமைத்து பொதுமக்களின் அவதியை தீர்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.



