தூத்துக்குடி, ஆக. 3 –
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் வழியாக உப்பாற்று ஓடைக்குச் செல்லும் மழைநீர் வடிகால் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலங்களில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதில் புதுக்கோட்டை உப்பாற்று மழைநீர் வடிகால் ஓடை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஓடை வழியாக மழைநீர் சீராகக் கடலுக்குச் செல்வதன் மூலம் மாநகரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்குக் குறைகிறது.
கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், நீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, உப்பாற்று ஓடையின் முகப்புப் பகுதியில் சுமார் 80 சதவீதம் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்ததாவது: “தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது கண்டறியப்படும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் சட்டப்படி அகற்றப்படும். நீர்வழித்தடங்களைப் பாதுகாக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.
ஆய்வின் போது, கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட நீர்வளத்துறை அதிகாரி தங்கராஜன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணிஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.



