கன்னியாகுமரி, மார்ச் 2 –
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டத்தை உத்திரபிரதேச மஹா மண்டலேஷ்வர் டாக்டர் பிரபாகரனந்தா சரஸ்வதி மகாராஜ் சுவாமிகள் வழங்கினார்.
உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில்(காசி) செயல்பட்டு வரும் ஸ்ரீ பஞ்ச தாசனம் ஆவாஹன் அகதா சார்பில் நீண்ட காலமாக இறைபணியில் திறம்பட செயலாற்றி வரும் இறைபணியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மடாதிபதி பட்டங்களை வழங்கி வருகிறது.
அந்த வகையில் குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை அடுத்த காணி மடத்தில் கடந்த 38 வருடங்களுக்கு மேலாக இறைப்பணி செய்து வரும் காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்திராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன் காமராஜ் சுவாமிகள் நெல்லை, மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்கள், சிங்கப்பூர் மலேசியா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆற்றி வரும் இறை பணியையும், சேவைகளையும் அறிந்து கொண்டு அவரை தேர்வு செய்தனர்.
பின்னர் அவர்கள் காணிமடம் வந்து யோகி ராம்சுரத்குமார் மந்திராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன் காமராஜ் சுவாமிகளை நேரில் சந்த்தித்தனர். தொடர்ந்து இருதினங்கள் பல்வேறு பூஜைகள், அபிஷேகம் செய்தும், அவருக்கு பல்வேறு ஆகமங்களை உபதேசித்தும், தீட்சை வழங்கியும் தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு (பீடாதிபதி) எனும் பட்டத்தை உத்திரபிரதேசம் மாநில மஹா மண்டலேஷ்வர் டாக்டர் பிரபாகரனந்தா சரஸ்வதி மகாராஜ் சுவாமிகள், குமரி மாவட்டம் வெள்ளிமலை சைதன்யா ஆனந்த்த சுவாமிஜீ மகராஜ் முன்னிலையில் வழங்கினார்.



